பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு – நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் லக்னோ சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றஞ்சாட்டி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. லக்னோவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள உமாபாரதி உள்ளிட்டோர் காணொலி மூலம் ஆஜராகிறார்கள். நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் 2,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version