பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக குறைந்தது

கர்நாட நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தாக்கம் குறைந்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கலுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரத்து 985 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.27 அடியாகவும், நீர் இருப்பு 87.646 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தைக் காட்டிலும், நீர் திறப்பு குறைவாக இருப்பதால் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

Exit mobile version