நடுரோட்டில் ஜோதிடர் வெட்டிக்கொலை- வீடியோ வெளியானதால் பரபரப்பு

திருப்பூரில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் நடு ரோட்டில் ஜோசியர் ஒருவரை கொலை செய்யும் காட்சி வெளியாகி உள்ளது. நீண்ட அரிவாளால் சரமாரியாக அவர் வெட்டும் காட்சிகள் மனதை பதைபதைக்க வைப்பதாக உள்ளது.

திருப்பூர் பார்க்ரோட்டில் மரத்தடியில் கிளி ஜோசியம் பார்த்து கொண்டிருந்தவர் ரமேஷ். திருப்பூர் மங்களம் என்ற ஊரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க இவர் பகல் 12.30 மணி அளவில் பெஸ்ட் காம்ப்ளக்ஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்த இளைஞர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் ஜோசியர் சரிந்த பிறகும், ஆத்திரம் தீரும் வரை அந்த நபர் வெட்டினார். பின்னர் ஜோசியர் குறித்த ஒரு துண்டு பிரசுரத்தை வீசிவிட்டு அந்த நபர் நிதானமாக அங்கிருந்து தப்பினார். பட்டப் பகலில் நடந்த இந்தக் கொடூரம் பற்றி அறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று ஜோசியரின் உடலையும், கொலையாளி வீசிச் சென்ற நோட்டீசையும் கைப்பற்றினர். ஜோசியம் பார்ப்பது போல பெண்களை வசியம் செய்து அவர்களை தவறான செயலுக்கு ரமேஷ் பயன்படுத்துகிறார் என்பதே அந்த நோட்டீஸில் உள்ள சாராம்சமாகும். எனவே ஜோசியரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரே இந்தக் கொலையை செய்திருக்கவேண்டும் என்ற கோணத்தில் திருப்பூர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Exit mobile version