புயலால் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், குடிநீர் தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களைக் குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
துணை வேந்தர் பதவி காலியாகும் பல்கலைக்கழகங்களில் உடனடியாக துணை வேந்தரை நியமிக்க முன்கூட்டியே ஆய்வு கமிட்டி அமைக்கப்படும் என்றும், அதேபோல் காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் மற்றும் இதர பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.