சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள அமேசான் காட்டுத் தீ

பிரேசில் நாட்டின் அமேசான் மழைக் காடுகளில் தொடரும் காட்டுத் தீயால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் அமேசான் மழைக் காடுகளில், புதிதாக ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் போயிங் தீயணைப்பு விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

உலக மக்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனில் 20 விழுக்காட்டை உற்பத்தி செய்வது அமேசான் மழைக் காடுகள் தான். 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மழைக்காடு, பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பொலிவியா, கயானா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள தீ மிகப்பெரிய அளவில் பரவி வருவதால், கட்டுப்படுத்த முடியாமல் அதனை சுற்றியுள்ள நாடுகள் திணறி வருகின்றன. தீயைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரேசில் நாட்டின் அமேசான் காட்டில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் ஆயிரத்து 663 காட்டுத் தீ புதிதாக உருவாகி உள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட காட்டுத் தீ, அமேசான் ஆற்றுப் படுகையில் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version