’எடப்பாடி ஹீரோ, ஓபிஎஸ் ஜீரோ!’ – தீர்ப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலகல பேச்சு!

admk verdict jayakumar

பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றிய செய்தியாளர் சந்திப்பில், ஓபிஎஸ் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் செய்தியாளர் சந்திப்பில் கலகலப்பை ஏற்படுத்தியது. 

அதிமுக பொதுக்குழு தொடர்பான பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லாது என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடித் தீர்ப்பை வழங்கியது.

இத்தீர்ப்பு அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், தீர்ப்பு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ”அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. தீர்ப்பில் இரண்டு முக்கியமான கருத்துகள் கூறப்பட்டுள்ளன. ஒன்று, ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டம் செல்லும். மற்றொன்று, பொதுக்குழு குறித்து தனிநீதிபதி கூறிய தீர்ப்பு செல்லாது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் இந்த தீர்ப்பினைக் கொண்டாடி வருகின்றனர்” என்று கூறினார்.

மேலும் ’அரசியலில் ஓபிஎஸ்-ன் எதிர்காலம் என்ன?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஒரே வார்த்தையில், ”ஜீரோ” என்று அவர் பதிலளித்தார். இதனால் செய்தியாளர் சந்திப்பு கலகலத்தது.

Exit mobile version