தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நாகை மீனவர்கள் 7 பேரை கடந்த 9ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 42 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதால் அவர்களின் குடும்பங்கள் துயரத்திற்கு ஆளாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாக் நீரிணையில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 26 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version