தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றியத்துக்குட்பட்ட மைலம்பாடி ஊராட்சியில் ஐந்தரை கோடி மதிப்பில் காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட இருப்பதாக கூறினார்.
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று கூறிய அவர், வெளி மாநிலங்களிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை தமிழகத்திற்குள் கொண்டு வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.