கேரள அரசு வழங்கும் தண்ணீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவல் உண்மையில்லை என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கமளித்தார்.
இயற்கை பொய்த்ததால் தமிழகத்தில் வறட்சி நிலவி வரும் நிலையில், மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில், தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் தமிழகத்திற்கு அனுப்ப கேரள அரசு முன் வந்தது. ஆனால் இதனை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இது தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதில், கேரள அரசு தண்ணீர் தர முன்வந்ததற்கு முதற்கண் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் முதலமைச்சர் நன்றியை தெரிவித்துக்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள அரசு தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை அனுப்பினால் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதால், வெள்ளியன்று அதிகாரிகளுடன் முதலமச்சர் ஆலோசனை நடத்தி இது குறித்த உரிய முடிவினை அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post