நாமக்கல் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி

நாமக்கல் அருகே, காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் உள்ள கோயில் கட்டடத்திற்கு டைல்ஸ் ஒட்டும் பணியை முடித்துவிட்டு சுமோ காரில் வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் உட்பட 6 பேர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் சின்னவேப்பநத்தம் அருகே வந்த போது எதிரே செங்கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த கட்டடத் தொழிலாளர்கள் சசிகுமார், சதீஸ்குமார், தர்மா, பப்லு, ரோஷன்குமார், ஜிஜேந்திரன் ஆகிய 6 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த நாமக்கல் காவல்துறையினர் சடலங்களை மீட்டனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

விபத்து காரணமாக நாமக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

Exit mobile version