யானைகவுனி படுகொலை – முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது!

யானைகவுனியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயமாலா உள்பட 3 பேரை டெல்லியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை யானைகவுனியில் கடந்த 11ஆம் தேதி தலில் சந்த் – புஷ்பா பாய் தம்பதி மற்றும் இவர்களது மகன் ஷீத்தல் குமார் ஆகிய 3 மூன்று பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, சகோதரர்களை ஏவி கொலை செய்ததாக சந்தேகித்த காவல்துறையினர், ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் உள்பட 3 பேரை புனேவில் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்து வந்த ஜெயமாலா உள்பட சிலரை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். ஜெயமாலா உறவினர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், அவரது வங்கிக் கணக்குகளையும், உறவினர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், ஜெயமாலா ஆக்ராவில் பதுங்கி இருப்பதாகவும், அங்கிருந்து உறவினர் வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கிடைத்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ஜெயமாலா மற்றும், அவரது சகோதரர் விலாஸ் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

Exit mobile version