1520 தொழில் அதிபர்களை காப்பாற்றியுள்ளார் பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு

 

லலித் மோடி, அனில் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு உதவும் பிரதமர் மோடி, விவசாயிகள், இளைஞர்களுக்கு உதவவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, நாட்டின் பாதுகாவலனாக இருப்பேன் என பிரதமர் மோடி பேசியதாகக் கூறினார். ஆனால், யாரை பாதுகாப்பேன் என பிரதமர் கூறவில்லை என விமர்சித்த ராகுல், ஆயிரத்து 520 தொழிலதிபர்கள் பிரதமரால் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, அனில் அம்பானி உள்ளிட்டோருக்கு உதவி செய்துள்ள பிரதமர், விவசாயிகள், இளைஞர்களுக்கு உதவவில்லை என அவர் குற்றம்சாட்டினார். பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவை நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளதாக அவர் கூறினார். சிறு, குறு தொழில், பொது மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் ராகுல்காந்தி புகார் தெரிவித்தார்.

Exit mobile version