லக்னோவில் பட்டப்பகலில் கேஸ் ஏஜென்சி ஊழியர் சுட்டுக் கொலை – 10 லட்சம் ரூபாய் கொள்ளை

பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கேஸ் ஏஜென்சி ஊழியரை சுட்டுக் கொன்றுவிட்டு 10 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றிருக்கும் சம்பவம் லக்னோவில் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரின் விபுதி காண்ட் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை டெபாசிட் செய்ய கேஸ் ஏஜென்சி ஊழியரான சியாம் சிங் சென்றார். அப்போது மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

இந்தநிலையில் நீண்டநேரமாக சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சியாம் சிங்கை யாரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சியாம் சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

Exit mobile version