விண்வெளியில் சுற்றும் குப்பைகள் – நாசா எச்சரிக்கை

 

பூமியின் சுற்றுப்பாதையில் 2 ஆயிரத்து 200 செயற்கைகோள்கள் குப்பைகளாக சுற்றிவருவதாக நாசா தெரிவித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஒன் வெப் உள்பட பல விண்வெளி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் , செயற்கைக் கோள்களை புவியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளன.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் தற்போது நான்காயிரம் செயற்கைக் கோள்கள் சுற்றி வருகின்றன.இதில் ஆயிரத்து 800 மட்டுமே செயற்பாட்டில் உள்ளன. மீதமுள்ள இரண்டாயிரத்து 200 செயற்கைகோள்கள் குப்பைகளை போல சுற்றி வருகின்றன.

இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 12 ஆயிரம் இணைய தள செயற்கைகோள்களை அனுப்ப அனுமதி கோரியுள்ளது. ஒன்வெப் நிறுவனம் 720 செயற்கை கோள்களுக்கு அனுமதி பெற்றுள்ளது. ஆயிரத்து 260 செயற்கை கோள்களுக்கு அனுமதி கோரியுள்ளது.

இவையனைத்தும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமாயின் அப்போது உள்ள செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதிலும் நான்கு மடங்காக இருக்கும்.இது பெரிய செயற்கைகோள் மோதல்களுக்கு வழிவகுக்கும் என நாசா எச்சரித்துள்ளது.
இதனால் செயற்கை கோள்கள் அவற்றின் செயற்பாட்டுக் காலம் முடிவடைந்ததும் திரும்பப்பெறப்பட வேண்டும் என நாசா கோரிக்கை வைத்துள்ளது.

Exit mobile version