கோவா மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது.

40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 16 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.

14 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, சிறிய கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், மாநிலத்தில் தலைமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. இந்தநிலையில், புதிய அரசு அமைக்க தங்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறு காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது.

இது தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version