கல்வி நிறுவனங்களில் சர்ஜிக்கல் தாக்குதல் தினம் கொண்டாட முடிவு

வரும் 29ஆம் தேதியை சர்ஜிக்கல் தாக்குதல் தினமாகக் கொண்டாட பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 29 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள், இந்திய பாதுகாப்பு படையினர் நுழைந்து, 7 இடங்களில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினர். அதனை நினைவுகூறும் வகையில், இந்தாண்டு அனைத்து உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில், வரும் 29 ஆம் தேதியை சர்ஜிக்கல் தாக்குதல் தினமாகக் கொண்டாட பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், என்.சி.சி. சிறப்பு பரேடு நடத்த ஆணைப் பிறப்பிக்கவும், எல்லை பாதுகாப்பு குறித்துக் கலந்துரையாடவும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது. மேலும், இந்தியா கேட் போன்ற நாட்டின் தேசபக்தியைப் பறைசாற்றும் பல்வேறு பகுதிகளிலும், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும், சர்ஜிக்கல் தாக்குதல் குறித்த சிறப்புக் கண்காட்சியை நடத்தவும், பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version