அபிராமியுடன் சேர்த்து பேசாதீர்கள் ப்ளீஸ்… கண்ணீர்விட்ட நடிகை நிலானி

அபிராமியுடன் சேர்த்து வைத்து தன்னை விமர்சனம் செய்யாதீர்கள் என்று கண்ணீருடன் நடிகை நிலானி கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சினிமா உதவி இயக்குநரான காந்தி லலித்குமார், கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே, சின்னதிரை நடிகை நிலானி என்பவரை, காந்தி லலித்குமார் காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரிந்ததே, தற்கொலைக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி, மனு கொடுக்க வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிலானி, செய்தியாளர்கள் முன்னிலையில் கண்ணீர்விட்டு அழுதார்.

தனக்குத் திருமணம் ஆன நிலையில், 6 வருடங்களுக்கு முன்பே கணவருடன் பிரிந்து வாழ்வதாகவும், தனக்கு 2 குழந்தைகள் உள்ளதாகவும் கூறினார். மேலும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி லலித்குமார் தனக்கு நண்பராக அறிமுகம் ஆன நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகத் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல முறை வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு கட்டத்தில், அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக, அவரே தன்னிடம் சொன்னதாகவும் தெரிவித்தார். இதனால், அவரைத் தவிர்த்து வந்த நிலையில், அவர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதனைத்தொடர்ந்து, தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தன்னைப் பலமுறை மிரட்டிக் கொண்டே இருந்ததாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கண்ணீருடன் கூறிய அவர், இப்படி நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால், அவரைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருப்பேன் என்றும் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தால் தன்னைப் பலரும் தவறாக இணைய தளத்தில் விமர்சனம் செய்து வருவதாகவும் கவலையுடன் தெரிவித்த அவர், தயவு செய்து தன்னை அபிராமியுடன் சேர்த்து விமர்சனம் செய்யாதீர்கள் என்றும் அழுதுகொண்டே நடிகை நிலானி கேட்டுக்கொண்டார்.

Exit mobile version