ஸ்டெர்லைட் ஆலையில் செப். 22 முதல் ஆய்வு – தருண் அகர்வால் குழுவுக்கு அனுமதி

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் செப்டம்பர் 22 முதல் 3 நாட்கள் ஆய்வு செய்யும் எனத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்துள்ளது.

இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அனுமதி அளித்தது.

மேலும்,இது தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இந்நிலையில் தருண் அகர்வால் தலைமையிலான குழு செப்டம்பர் 22 தேதி முதல் 3 நாட்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Exit mobile version