விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பணி துவக்கம்

சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பணிகள் தொடங்கின.

நாடு முழுவதும் கடந்த 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் 5 அடி முதல் 10 அடி வரையிலான 2 ஆயிரத்து 500 சிலைகள் வைக்கப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்றும், நாளையும் கடலில் கரைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

இதற்காக பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கரைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கடற்கரையில் கரைக்கும் பணி தொடங்கி உள்ளது. பொக்லைன் இயந்திரங்கள், ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் தூக்கப்பட்டு, கடலில் கரைக்கப்படுகின்றன.

விநாயகர் சிலைகள் கடலுக்கு செல்லும் பாதையிலும் விநாயகர் ஊர்வலத்திலும் பாதுகாப்பு பணிக்காக சுமார் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் நேரத்தில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டும் என போலீசார் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version