விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை -அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பதால், அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று அமலாக்கத்துறை வலியுறுத்தி உள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதேசமயம் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி இருந்தது.

இந்தநிலையில், டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள அமலாக்கத்துறை, விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முறையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளது.

இதனால் அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்தது. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு கார்த்தி சிதம்பரம் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Exit mobile version