மீனவர்கள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்த முயன்றதால் பதற்றம்

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் வழியாக வந்து சில மீனவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் மற்றொரு கிராம மக்களைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மற்றும் புத்தன்துறை ஆகிய இரு மீனவ கிராமங்களுக்கிடையே, கடல் பகுதியில் மீன்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள், இரு மீனவ கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், புத்தன் துறை மீனவ கிராமத்துக்கு ஆதரவாக, முட்டம் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீனவர்கள், நாட்டுப்படகுகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன், மணக்குடி கிராம மக்களைத் தாக்குவதற்காக கடல்வழியில் வந்ததாகத் தெரிகிறது. இதனால், செய்வது அறியாது தவித்த மணக்குடி கிராம மக்கள், படகுகளில் கடலுக்குச் சென்று உயிர் தப்பினர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக விரைந்து வந்த போலீசார், வன்முறையாளர்களைத் தடுத்து நிறுத்தினர். மேலும், இரு கிராமங்களிலும் துப்பாக்கி ஏந்திய நிலையில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Exit mobile version