பெட்ரோல்- டீசல் விலை குறைந்தது

பெட்ரோல் டீசல் விலை தற்போது 2 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளதால், இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் மீதான கலால்வாரி 1 ரூபாய் 50 காசுகளும், எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும் விலையைக் குறைக்கும் என்று தெரிவித்தார். மேலும், பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் 2 ரூபாய் 50 காசுகள் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனால் ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 12 சதவீதமாகவும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 16 சதவீதமாகவும் சரிந்துள்ளது. இந்த வரிக்குறைப்பின் காரணமாக, மத்திய அரசுக்கு 21 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விலைக்குறைப்பு வலியுறுத்தலை ஏற்று, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் மேலும் 2 ரூபாய் 50 காசுகள் குறைத்துள்ளது. இதனால், அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.

இந்த விலை குறைப்பு நடவடிக்கை நள்ளிரவு 12 மணிமுதல் அமலுக்கு வந்தது. அதன்படி, சென்னையில் 87 ரூபாய் 33 காசுகளுக்கு விற்கப்பட்ட பெட்ரோல், கலால் வரி குறைப்புக்குப் பின், 84 ரூபாய் 83 காசுகளுக்கு விற்கப்படுகிறது. அதேபோல், 79 ரூபாய் 79 காசுகளுக்கு விற்கப்பட்ட டீசல், கலால் வரிகுறைப்புக்குப்பின் 77 ரூபாய் 29 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

Exit mobile version