சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீதான ஊழல் புகாரை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு

சிபிஐ விவகாரம் தேசிய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீதான லஞ்ச புகாரை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து சிபிஐ-யின் இடைக்கால இயக்குநர் நாகேஷ்வர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

லஞ்ச புகார்களை தொடர்ந்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் அஸ்தானா ஆகியோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அஸ்தானா மீது ஏற்கனவே பதிவு செய்திருக்கும் புகாரில், வரும் அக்டோபர் 29ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் கட்டாய விடுப்பை ரத்து செய்ய கோரி அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.  சிபிஐயில் நிலவும் குழப்பங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கறைபடிந்த அதிகாரிகளால் நேர்மையான விசாரணை நடைபெறாது என்பதற்காகவே, இருவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாக கூறினார். இந்தநிலையில், சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீதான ஊழல் புகாரை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்து சிபிஐயின் இடைக்கால இயக்குநர் நாகேஷ்வர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version