குருப்பெயர்ச்சி விழா கோலாகலம்!

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த ஆண்டு குருபகவான், துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இரவு 10 மணி 5 நிமிடங்களுக்கு இடம் மாறினார். குருப்பெயர்ச்சியையொட்டி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில், குருப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனால், அதிகாலை 3 மணிக்கு இக்கோவிலில் குரு பரிகார யாக பூஜைகள் நடந்தன. மூலவர் குருபகவானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, உற்சவர் தட்சிணாமூர்த்தி, குருபகவான் சன்னதி எதிரே உள்ள பிரகாரத்தில் எழுந்தருளினார்.

குறிப்பாக, இரவு 10.05 மணிக்கு, குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி அடைந்த நேரத்தில், தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். இதனிடையே, குருப்பெயர்ச்சியைத் தொடர்ந்து 2-வது கட்ட லட்சார்ச்சனை விழா வரும், 8 ஆம் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version