எம்.ஜி.ஆரைப் போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரைப் போல் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் இல்லத்தில் மூன்று நேரமும் இலவசமாக உணவு அளிக்கப்பட்டு வந்தது. வீட்டிற்கு வந்தவர்களை வயிறார உணவிட்டு மகிழ்ச்சியுடன் அனுப்புவதுதான் எம்.ஜி.ஆரின் வழக்கமாக இருந்தது.

அதேபோல் ஒரு காட்சியை இப்போது நாம், சென்னையில் உள்ள கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திலும் பார்க்க முடிகிறது.

இங்கும் உலை கொதித்த வண்ணம் உள்ளது. மூன்று வேளையும் முதல்வரின் வீட்டிற்கு வரும் தொண்டர்கள், பொதுமக்களுக்கு உணவு வழங்க சமையல் வேளை வேகமாக நடக்கிறது.

முதலமைச்சரின் வீட்டிற்கு வருவோர் போவோர் திருப்தியுடன் சாப்பிட்டு செல்கின்றனர். தன்னை சந்திக்க வரும் யாரும் பசியுடன் செல்லக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் இப்படியொரு ஏற்பாட்டை செய்து இருக்கிறார்.

எம்.ஜி.ஆரை போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு வரும் தங்களை போன்ற தொண்டர்களுக்கு உணவளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தொண்டர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version