ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை செய்யப்பட்டார்.

ஊழல் செய்து சேர்ந்த பணத்தில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் சொகுசு குடியிருப்புகள் வாங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரீப், மருமகன் முன்னாள் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட பாகிஸ்தான் பொறுப்பு நீதிமன்றம், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகன் முகமது சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தது. கடந்த ஜூலையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நவாஸ் ஷெரீப்பிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மரியம் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறையும் முகமது சப்தாருக்கு ஓராண்டு சிறையும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மூவரும் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கள் மீதான ஊழல் வழக்கை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி அதர் மினாலா தலைமையிலான அமர்வு, ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் உள்பட 3 பேரின் தண்டனையையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. மேலும், 5 லட்சம் ரூபாய் பிணைத்தொகையில் மூவரையும் விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் உள்பட 3 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Exit mobile version