இந்தியாவிலேயே பாதுகாப்பான அமைதியான நகரமாக சென்னை விளங்குகிறது – காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்

இந்தியாவிலேயே மிக பாதுகாப்பான அமைதியான நகரமாக சென்னை விளங்குகிறது என்று சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை பழைய பல்லாவரம் ரேடியல் சாலையில் 1014 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தினை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,”கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு குற்றங்கள் குறைவாக உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளது. செயின் பறிப்பு செல்போன் பறிப்பு குறைந்துள்ளது என குறிப்பிட்டார்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குற்றமே இல்லாத அளவுக்கு செய்ய முடிந்துள்ளது என்று குறிப்பிட்டார். குற்றவாளிகள் வந்தால் கண்டு பிடிக்க கூடிய அளவிற்கு டி.நகரில் கடந்தாண்டு வசதிகள் செய்யப்பட்டிருந்தன, இதனால் அங்கு குற்றங்கள் நடைபெறவில்லை எனவும் பெசன்ட் நகரில் நடைபெற்ற கொலை உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக செல்லலாம் என்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிசிடிவி மூலம் புரட்சி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர் அனைவரும் வீடுகள் கடைகள் அலுவலகத்தில் வெளியில் தெரியும்படி சிசிடிவி களை பொருத்த வேண்டும் என குறிப்பிட்டார். சென்னையில் உள்ள எம்.பிக்கள் எம்.எல்.ஏக்.,கள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சிசிடிவி பொருத்துவதற்கு உதவி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 4 மாதங்களில் மட்டும் சென்னையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செயின்ட் தாமஸ் மௌன்ட் பகுதியில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 9 ஆயிரத்து 256 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இணை ஆணையர் மகேஸ்வரி துணை ஆணையர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version