ஆறுமுகசாமி ஆணையம் – காலநீட்டிப்பு கேட்க முடிவு

 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் காலநீட்டிப்பு கேட்க முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், விசாரணை ஆணையம் அமைப்பதற்கான அரசாணை செப்டம்பர் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. முதலில் மூன்று மாதம், பின்னர் ஆறுமாதம், அதன் பின் நான்குமாதம் என தமிழக அரசு காலநீட்டிப்பு வழங்கியது. விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ,103 பேரிடம் விசாரணையை நடத்தி முடித்திருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவதாக வழங்கப்பட்ட 4 மாத கால நீட்டிப்பானது வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. குறிப்பிட்ட தேதிக்குள்ளாக விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்துவிடலாம் என்ற அடிப்படையில், ஆணையம் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறது. இருப்பினும் சில உயர் அதிகாரிகள், மூத்த மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, உள்ளிட்ட பலரை விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே மேலும் மூன்று மாத காலத்திற்கு, அரசிடம் கால நீட்டிப்பு கேட்கலாம் என ஆணையம் முடிவு செய்துள்ளது.

Exit mobile version