அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா – எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மரியாதை

அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 17ம் தேதி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொடங்கப்பட்டு 46 ஆண்டுகள் நிறைவடைந்து, 47வது ஆண்டு தொடக்க விழா வரும் 17ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அன்றைய தினம் விழா நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, அதிமுக கொடியினை ஏற்றி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த தொண்டர்களின் குடும்பங்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version